இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இனப்படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு மெளனமாக இருப்பதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நேற்று சட்டப் பேரவைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது திடீரென பெண்கள் அனைவரும் சட்டசபை வளாகத்திற்குள் புக முயன்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வக்கீல்கள் காலவரையற்ற ஸ்டிரைக் ..
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இனப்படுகொலை நிற்க வேண்டும். இந்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபியில் கடையடைப்பு ..
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து கோபிச்செட்டிப்பாளையத்தில் வணிகர்கள் நேற்று கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக கோபி முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பல பகுதிகளில் மாணவர்கள் உண்ணாவிரதம் ...
அதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சேலம் மத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று 3வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடருகிறார்கள்.
கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கோவையில் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.