ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகம் முன்பு தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 9 தமிழ் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மேலும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும், வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணா விரதம் இருந்து வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரும் திரளான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
மேலும் தங்களது போராட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் சுவிஸ் மக்களிடையே விநியோகித்து வருகின்றனர்.
இன்று மாலையில் தங்களது கோரிக்கை மனுவை ஐ.நா. அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளனர்.
"உண்ணாமல் இருந்து உறவைக் காப்போம்" என்கின்ற தலைப்பில், பிப்ரவரி 4ம் தேதி ஜூரிச்சில் உள்ள துர்க்கையம்மன் ஆலயத்தில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.