சென்னை எச்.பி.சி.எல். கிடங்கில் தீ விபத்து - பெரும் சேதம் தவிர்ப்பு
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின், கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான ஆயில் கேன்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை கொருக்குப்பேட்டையில் மத்திய அரசின் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு உள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு, கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அது மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பிரித்து எடுக்கப்பட்டு இங்கு சப்ளைக்கு வருகிறது.
இங்கு தினமும், தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சுமார் 400 டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் எடுத்து செல்லப்படுகின்றன.
இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 9.50 மணிக்கு லுப்ரிகண்ட் சேமிப்பு கிடங்கில் தீப்பற்றி கொண்டது.
இதையடுத்து அங்கு வேலையிலிருந்த அதிகாரி ராஜூ அருகிலிருந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதில் 3 தீயணைப்பு வாகனங்களும், 15 மேற்பட்ட மெட்ரோ தண்ணீர் லாரிகளும் பயன்படுத்தப்ட்டன.
ஆயில் பொருட்கள் தீப்பிடித்ததால் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால், பார்ம்' என்ற ரசாயணத்தை தண்ணீருடன் சேர்த்து, அதன் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல் டேங்க் வெடிக்கப்போவதாக வதந்தி பரவியது. இதனால் உயிருக்கு பயந்த சிலர் வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
இந்த தீவிபத்தில் சுமார் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஆயில் கேன்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டதால், அருகில் உள்ள பெட்ரோல் கேன்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக ஷாக் அடித்ததில் டோமினிக் சேவியர் என்ற இந்தியன் ஆயில் கார்பரேஷன் ஊழியர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிறுவனத்தின் துணை மண்டல இயக்குனர் குமாரசாமி கூறுகையில், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணை கிடங்குகள் 20 அடி தூரத்தில் தான் இருக்கின்றன. தீ இன்னும் 10 நிமிடம் கூடுதலாக எரிந்திருந்தால் விபத்து பெரிதாக மாறியிருக்கும். வழக்கமாக இந்த பகுதியில் 50 ஊழியர்கள் வேலை செய்வார்கள். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் யாரும் வரவில்லை என்றார் குமாரசாமி.