மருத்துவமனையில் கூட்டணிக் கட்சியினருடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: முதல்வர் கருணாநிதி நேற்று இரவு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முதுகுவலி காரணமாக கடந்த ஒரு வாரமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கைப் பிரச்சினை வெடித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மாணவர் போராட்டம், வக்கீல்கள் போராட்டம், டாக்டர்கள் போராட்டம் என பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நாளை பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று திமுக செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில் நேற்று இரவு மருத்துவமனையில் கூட்டணிக் கட்சியினரின் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டினார்.
இதில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கூட்டணிக் கட்சியினருடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக ஆகிய கட்சிகளின் பிரநிதிகள் கலந்து கொள்ளவில்லை.
இக்கூட்டம் தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், கே.பொன்முடி, எ.வ.வேலு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், எம்.பி., புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., எல்.கணேசன், எம்.பி., தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், தி.மு.க. அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கே.செல்லமுத்து, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், எம்.பி., கவிஞர் கனிமொழி எம்.பி., மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications