இலங்கை விவகாரத்தில் சில கட்சிகள் 'பாவ்லா' காட்டுகின்றன - கருணாநிதி
சென்னை: இலங்கை விவகாரத்தில் சில கட்சிகள் நாடகமாடி வருகின்றன. பாவ்லா காட்டுகின்றன. ராமதாஸ் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடந்தது. அக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழ்நாட்டில் சிலர் திடீரென இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம் என்று "பாவ்லா'' காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ் எல்லாம் முதல்- அமைச்சர் தான் சொல்ல வேண்டும் என்றார். என்னை எல்லாம் சொல்ல வைத்து எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் ஏற்படுத்தி, இவர் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள நினைக்கிறார்.
திண்ணை காலியாகாது ...
இந்த ஆண்டுக்குள் தி.மு.க. முடிந்து எங்கள் ஆட்சி வரும் என்று ஜெயலலிதா கூறினார். இலங்கை பிரச்சினைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைக்கிறார்கள்.
திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழம் பற்றி பேச, வெளிநாட்டு தமிழர்கள் பற்றி பேச, திராவிட இயக்கங்கள் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. தமிழர்களுக்காக போராடுவது போல சிலர் நாடகம் ஆடுகிறார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: நாளை நடைபெறும் முழு அடைப்பு குறித்து...
கருணாநிதி:- நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. முதல்-அமைச்சர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கேள்வி: இந்தப் போராட்டத்தால் பயன் ஏற்படாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளாரே ...
கருணாநிதி: அவரது கருத்து வரவேற்க தகுந்தது.
கேள்வி: இலங்கை தமிழர்கள் மீது தொடர்ந்து குண்டு வீசப்படுகிறதே?
கருணாநிதி: சிங்களர்கள் அநியாயம் செய்கிறார்கள். தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்பது என் கருத்து.
இந்தியா போரை நடத்தவில்லை ...
கேள்வி: போரை இந்திய ராணுவம் நடத்துவதாக சொல்கிறார்களே?
கருணாநிதி: இது பொய்யான குற்றச்சாட்டு. இதற்கு இந்திய பாதுகாப்பு மந்திரி பதில் அளித்துஇருக்கிறார்.
கேள்வி:- இலங்கை பிரச்சினையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று வற்புறுத்து கிறார்களே?
கருணாநிதி: ஐ.நா. தலையிட்டால் நல்லது. அதை நான் வரவேற்கிறேன்.
கேள்வி: தமிழ்நாட்டில் போராட்டம் செய்பவர்கள், தமிழீழத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதி பிரபாகரன் என்பதை முன்நிறுத்தி போராடுகிறார்களே?
கருணாநிதி: பிரபாகரன் என்பதற்காக அல்ல. இலங்கை தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் பிரச்சினை.