முதல்வர் கருணாநிதியின் தசைப் பிடிப்புக்கு சிகிச்சை - மேலும் ஒரு வாரம் ஓய்வு
சென்னை: முதுகு வலியால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதிக்கு இன்று தசைப்பிடிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மேலும் ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரை யாரும் சந்திக்க வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக தனது முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதிக்கு இன்று காலை 6 மணியளவில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு குறிப்பிட்ட உடல் பகுதியில் ஊசி போடப்பட்டு முதுகெலும்பில் வலியை ஏற்படுத்தி வரும் தசைப் பிடிப்பை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர் தணிகாசலம், டாக்டர் மகேஷ், டாக்டர் கோபால், டாக்டர் அருணா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஒரு வாரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் நேரில் வருவதை தவிர்த்து முதலமைச்சர் விரைவில் முழு உடல் நலம் பெற்று பணியைத் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications