சார்க் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு போகிறார் பிரணாப்
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் கொழும்பு செல்கிறார். இந்த முறை சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் போகிறார்.
பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கொழும்பில் சார்க் மாநாடு நடைபெறுகிறது. அதில் இடம் பெறும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் 26ம் தேதி கொழும்பு செல்கிறார். சமீபத்தில் அவசரம் அவசரமாக கொழும்பு சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி.
அப்போது முல்லைத்தீவு வெற்றியை அவருடன் பகிர்ந்து கொண்டதாக இலங்கை அரசு பின்னர் தெரிவித்தது.
போர் நிறுத்தம் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்படவில்லை என்றும், நாங்கள் அழைத்துத்தான் பிரணாப் வந்ததாகவும் இலங்கை தெளிவுபடுத்தியது.
அப்பாவித் தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்தி பிரணாப் பயணம் எந்த வகையிலும் உதவியதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், கொழும்புக்கு மீண்டும் பிரணாப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இருப்பினும் இந்த பயணத்தின்போதும் அப்பாவித் தமிழர் படுகொலையை நிறுத்துவது குறித்து அவர் ஆக்கப்பூர்வமாக பேசுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.