இலங்கை: மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 8ம் தேதி பேரணி
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும், போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்புவதை வலியுறுத்தியும், மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 8ம் தேதி பேரணி நடத்தப்படும் என திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் 3-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியை நிலைநாட்டவும், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும், தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவுற்கு ஜனநாயக முறையில் நிரந்தரத் தீர்வு காணவும் வலியுறுத்தி தென் சென்னையில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் கழகப் பொருளாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி 8-ம் தேதி நடைபெறும்.
அன்று காலை 10 மணியளவில் சென்னை, மன்றோ சிலை அருகிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்.