வாஜ்பாய்க்கு செயற்கை சுவாசம்: கவலைக்கிடம்
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டநிலையில் நேற்று அவருக்கு திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இது குறித்து ஏய்ம்ஸ் மருத்துவமனை சூப்பிரன்டு டாக்டர் டி.கே சர்மா கூறுகையில், நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை சிறப்பாக இயங்கி வருகின்றன. டாக்டர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார் சர்மா.
நாக்பூரில் நடந்த பாஜகவின் செயற் குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாஜ்பாயின் உடல்நிலை குறித்த தகவல் உடனடியாக அளிக்கப்பட்டது.
கட்சியின் செய்திதொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், நெஞ்சு வலி காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பாஜக தேசிய செயற்குழு அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது என்றார்.
குணமடைய யாகம்:
இந்நிலையில் தானே நகரில் உள்ள சிவன் கோவிலில், வாஜ்பாய் பூரண குணமடைய மகாமிருதுஞ்சய் யாகம் நடத்தப்படுகிறது. இதற்காக 11 ஹோமகுண்டங்களில் தயார் செய்யப்பட்டு, இன்று காலை யாகம் துவங்கியது.
இதில் பாஜக தேசிய கவுன்சில் தலைவர் ஓம்பிரகாஷ் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோனியா-அத்வானி நலம் விசாரி்ப்பு:
இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோர் வாஜ்பாயை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தனர்.
அதன்பின்னர சோம்நாத் சட்டர்ஜி கூறுகையில், வாஜ்பாய் தைரியமாக இருக்கிறார். அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார் சட்டர்ஜி.
பாஜக தலைவர் அத்வானி ஏய்ம்ஸ் டாக்டர்களிடம் போனில் நலம் விசாரித்தார்.