கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீது தாக்குதல்
கொழும்பு: கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தை நூற்றுக்கணக்கான சிங்களர்கள் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உடனடியாக செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
இலங்கையின் வட பகுதியில் அரசுப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்து கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பால் காஸ்டெல்லா சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அலுவலகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான சிங்களர்கள் திரண்டனர். அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கினர். இதில், அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.
பின்னர் போலீஸார் விரைந்து வந்தனர். இதையடுத்து கும்பல் கலைந்து சென்றது.
முல்லைத்தீவில் நடந்து வரும் சண்டையில், இலங்கைப் படைகள் செய்து வரும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திரட்டி வருவதாக நேற்று காலை தேசிய சுதந்திர முன்னணிக் கூட்டணியின் தலைவரான விமல் வீரவன்சா கூறியிருந்தார்.
அவர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications