தா.பாண்டியன் கார் எரிப்பு-கருணாநிதி கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா. பாண்டியனின் கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட செய்தி திடுக்கிட வைத்தது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அச்செயலை யார் செய்திருப்பினும் அவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கிட அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
காட்டுமிராண்டிதனம்-தங்கபாலு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் காரை யாரோ சில சமூக விரோதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவை வன்செயலாகவோ, மனித உடல், உடைமைகள் தாக்கப்படுவதாலோ தான் தீர்க்க முடியும் என்று செயல்படுவது அநாகரீக அரசியல் மட்டுமல்ல, ஆதிகால காட்டுமிராண்டித்தனமான வழி முறையாகும்.
இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகள் இனியொரு முறை நடைபெறாத வகையில் காவல்துறை கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தங்கபாலு.
வெட்கம் வெட்கம்...கி.வீரமணி:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தா.பாண்டியன் வீட்டில் அவரது கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது என்ற செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாரானாலும், அரசும், காவல்துறையும் உடனடியாகக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் எடுக்கும் நிலைக்கும் இத்தகைய சம்பவங்களுக்கும் காரணமோ, ஒருவேளை தொடர்போ இருந்தால் அது வெட்கப்பட வேண்டியது. வேதனைக்குரியது.
தமிழ்நாட்டின் பண்பாடு காக்கப்பட வேண்டும், பொதுவாழ்வில் கருத்துப்போர் நடைபெறலாமே தவிர, வன்முறை எந்த ரூபத்திலும் தலைதூக்க விடக்கூடாது. திராவிடர் கழக சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பிரிவு தலைவர் தாவூத் மியாகான் கூறுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமைதியை நிலைநாட்ட மிக தீவிரமாக முயற்சி செய்யும் நிலையில் தா.பாண்டியன் வீட்டில் அவரது கார் எரிக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications