இலங்கை விமானப்படைத் தாக்குதல் - தப்பினார் சூசை
கொழும்பு: இலங்கை விமானப்படையினர் நடத்திய தாக்குதலிலிருந்து கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை தப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், இலங்கை விமானப்படையினர், முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு சந்திப்புக்கு வட கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இருந்ததாக நம்பப்படும் மறைவிடத்தை குண்டு வீசித் தாக்கின.
இந்தத் தாக்குதலில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் சிலர் மூத்த நிர்வாகிகள் என நம்புகிறோம். அவர்களது பாடிகார்டுகளும் கொல்லப்பட்டனர்.
அந்த மறைவிடம், கடற்புலிகள் பிரிவின் ஒருங்கிணைப்புத் தலைமையகம் என தற்போது தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடந்த சமயத்தில் கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை அங்கிருந்ததாக நம்புகிறோம். இதை புலிகளின் தகவல் தொடர்பை மறித்துக் கேட்டபோது உறுதி செய்தோம். இருப்பினும் அவர் காயமடைந்துள்ளாரா அல்லது தப்பி விட்டாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
தாக்குதல் நடந்த இடத்தில் விடுதலைப் புலிகள் புல்டோசர்களைக் கொண்டு தோண்டியதைப் பார்த்து மீண்டும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், அந்த புல்டோசர்கள் சேதமடைந்தன. சில புலிகளும் உயிரிழந்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications