தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி துவக்கம்
தாம்பரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி நேற்று சென்னையில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா மாநாடு தாம்பரத்தில் ரெயில்வே மைதானத்தில் நேற்று நடந்தது. இதற்காக டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பஸ்,வேன், கார்களில் ஆயிரக்கணக்கில் தமுமுகவினர் திரண்டு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முன்னதாக நேற்று காலை மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது தலைமையில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் அ.மார்க்ஸ், பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகீர், அருள் ஆனந்த், கஜேந்திரன், தேவநேயன் ஆகியோர் பேசினார்கள்.
மாலையில், மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழா நடைபெற்றது. தமுமுக முன்னாள் பொருளாளர் சையத் நிசார் அகமது, மனித நேய மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதன் பின் மனித நேய மக்கள் கட்சி முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வக்பு வாரிய தலைவரும், தமுமுக பொதுச் செயலாளருமான ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் மீரான் மொய்தீன் நன்றி உரை வழங்கினார்.
மாநாட்டில் தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில்,
நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் உழைப்பது நமது கடமையாகும். அரசியல் சாக்கடை என்று கூறி நாம் அதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது.
சாக்கடையை சுத்தப்படுத்துவது நமது தலையாய பணி. நமது நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவும் மனித நேய கட்சி உதயமாகியுள்ளது.
முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பதை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும்.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத செயல்கள், தடுப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications