தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் நாயுடு
நாக்பூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி ஒவ்வொரு மாநிலத்துக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தார்.
இப்போது ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள ராஜ்நாத்சிங், முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று அறிவித்த அவர், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் போட்டியிட மாட்டார்கள் என்றும் அறிவித்தார்.
வெங்கையா நாயுடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அத்வானி அறிவித்தார்.
அருண் ஜெட்லி, உத்தரப் பிரதேசம், பிகார், டெல்லி, பஞ்சாப் ஆயவற்றின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் விவரம்:
நரேந்திர மோடி- குஜராத், மகாராஷ்டிரா, கோவா, டாமன் டையூ, தத்ரா மற்றும் நகர் ஹவேலி
சுஷ்மா சுவராஜ்- மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட்
அனந்தகுமார்- கர்நாடகம், மத்திய பிரதேசம்
சாந்தகுமார்- ஹிமாசலப் பிரதேசம், காஷ்மீர், ஹரியானா
கோஷியாரி- உத்தரகாண்ட், காஷ்மீர், ஹரியானா
வி.சதீஷ்- ஒரிஸ்ஸா.
செளஹான் சிங்- ராஜஸ்தான்
எஸ்.எஸ்.அலுவாலியா- மேற்கு வங்காளம்.
எஸ்.எஸ்.அலுவாலியா, ஹரேந்திர பிரதாப், சந்திரசேகர்-வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளர்களாகப் பணிகளை கவனிப்பார்கள் என அத்வானி அறிவித்தார்.