வாஜ்பாய் உடல் நிலையில் முன்னேற்ற அறிகுறிகள்
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலையில் முன்னேற்ற அறிகுறிகள் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் நல பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வாஜ்பாய். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எய்ம்ஸ் கண்காணிப்பாளர் டி.கே.சர்மா வெளியிட்ட அறிக்கையில், வாஜ்பாய் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
தற்போது அவரது உடல் நிலை ஸ்திரமாக உள்ளது. சிகிச்சைக்கு உடல் நல்ல முறையில் ஒத்துழைக்கிறது. லேசான முன்னேற்ற அறிகுறிகளும் இன்று காலை தென்பட்டன.
அவரது நுரையீரலில் ஏற்பட்டிருந்த நோய்த் தொற்று தற்போது குறைந்து விட்டது. நிமோனியா கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. நுரையீரலால் சுத்திகரிக்கப்பட்டு ரத்தத்திற்கு அனுப்படும் ஆக்சிஜனின் அளவு அதிகரித்துள்ளது. இது நல்ல விஷயம். நிமோனியா பரவலும் நின்று விட்டது என்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் அவருக்கு காய்ச்சலும், நெஞ்சு அடைப்பும் இருந்தது. பின்னர்தான் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.












Click it and Unblock the Notifications