இலங்கை: பெண் மனித வெடிகுண்டுக்கு 28 பேர் பலி
கொழும்பு: விஸ்வமடு அருகே தர்மாபுரம் பகுதியில், விடுதலைப் புலிகள் இன்று நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 28 பேர் பலியானார்கள்.
இன்று மதியம் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், பெண் விடுதலைப் புலி ஒருவர் உடலில் கட்டிய வெடிகுண்டுடன், அப்பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த பொதுமக்களுடன் சேர்ந்து வந்தார்.
ராணுவ வீரர்கள் அதிக அளவில் இருந்த இடத்திற்கு வந்ததும், அந்த பெண் புலி, தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தார் என்றார்.
இந்த சம்பவத்தில், 2 ராணுவ அதிகாரிகள், 18 படையினர், 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல், கொரில்லா போருக்கு விடுதலைப் புலிகள் தயாராகி வருவதை உணர்த்துவதாக தெரிகிறது.
மேலும், பொதுமக்களுடன் கலந்து வந்து ராணுவத்தைத் தாக்கும் உத்தியையும் புலிகள் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதாக கருதப்படுகிறது.