செந்தூர் எக்ஸ்பிரஸ்-வாரம் 5 நாள் இயங்கும்
திருச்செந்தூர்: திருச்செந்தூர்-சென்னை இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
இந்த ரயில் சேவையை லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருச்செந்தூர் தைப்பூச திருநாளுக்கு பெயர் பெற்றதாகும். இந்த நல்ல நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் வேண்டுகோளை ஏற்று இந்த ரயிலுக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்த நகரங்களோடு ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் ஆகிய ஊர்களிலும் இந்த ரயில் நின்று செல்லும். தற்போது இந்த ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும். பின்னர் அது தினமும் ஓட வகை செய்யப்படும். நான் பதவிக்கு வந்தபின் தமிழகத்துக்கு நிறைய ரயில்கள் விட்டுள்ளேன்.
இந்திய ரயில்வே மிகப்பெரிய துறை. பாஜக ஆட்சியில் அதன் நிலைமை மோசமாகிவிட்டது. இந்தியா ஒளிர்கிறது என்று சொன்னார்கள். ஆனால் ரயில்வே நஷ்டம் கண்டது.
நான் இந்த துறைக்கு அமைச்சரான பின்பு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி லாபம் கிடைக்கிறது. ரயில்வே பணம் ரூ.1 லட்சம் கோடியை சேமித்துள்ளோம்.
அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர்கள் மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள், பேராசிரியர்கள் எப்படி இது சாத்தியம் என ஆச்சர்யப்பட்டனர்.
எனக்கு இந்திய பொருளாதாரமும் தெரியும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் தெரியும். நான் அடித்தட்டு குடும்பத்தில் இருந்து வந்தவன். அவர்களுக்கு தகுந்தாற் போல ரயில்வே துறையில் மாற்றங்களை ஏற்படுத்தினேன். ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணத்தை குறைத்தேன்.
இதனால் பாமர மக்களும், ஏழை மக்களும் ரயிலில் அதிகமாக பயணம் செய்ய தொடங்கினார்கள். இதனால் ரயில்வே துறை இன்று லாபத்தில் இயங்குகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதி மிகத் திறமையானவர். அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வியும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவரால் தான் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் அகல ரயில்பாதை உங்களுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் லாலு.