பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு பாரத ரத்னா
2008ம் ஆண்டுக்கான பாரதரத்னா விருது பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லிக்கு வந்து விருதினைப் பெற்றுக் கொள்ள உகந்த நாளை தெரிவிக்குமாறு பீம் சென் ஜோஷியிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனது உடல் நலன் அதற்கு இடம் கொடுக்காது என்று தெரிவித்திருந்த பீம்சென் ஜோஷி, புனேவில் உள்ள தனது இல்லத்தில் விருதினை வழங்குமாறும், இதை எளிய நிகழ்ச்சியாக வைத்துக் கொள்ளுமாறும் மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் புனே வந்து பீம்சென் ஜோஷியை அவரது இல்லத்தில் சந்தித்து பாரதரத்னா விருதினை அளித்தார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை பீம்சென் ஜோஷியிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பாராட்டுப் பத்திரம் மற்றும் பீம்சென் ஜோஷியின் புகைப்படம் ஆகியவையும் வெளியிடப்பட்டது.