கலை-அறிவியல் கல்லூரிகள் 12ம் தேதி திறப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் வருகிற 12ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கல்லூரி மாணவர்கள் பல்வேறு விதங்களில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதால் அனைத்துக் கல்லூரிகள், விடுதிகளை மூட அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அரசின் உத்தரவை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து மருத்துவ, பொறியியல், விவசாயக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழில் கல்லூரிகளை மட்டும் 9ம் தேதி (நேற்று) திறக்க அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் வருகிற 12ம் தேதி முதல் கலை, அறிவியல் கல்லூரிகளையும் திறக்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வருகிற 12ம் தேதி கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை வகுப்புகள் தொடங்கும். 14ம் தேதி முதல் இளங்கலை வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.