என்னை எதிர்த்துப் போட்டியிட பொன்முடி தயாரா: வேல்முருகன் சவால்
கடலூர்: நான் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார். அதேபோல அமைச்சர் பொன்முடியும் ராஜினாமா செய்து விட்டு, என்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என்று பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் சவால் விடுத்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பாமக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யட்டுமே என்று கூறியிருந்தார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
இதற்கு பண்ருட்டி தொகுதி பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் பதிலளித்துள்ளார். பதில் சவாலும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வேல் முருகன், கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
1985-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை பிரகடனப் புத்தகத்தில், தமிழ் ஈழம் மலர ஆதரவு அளிப்போம், ஈழப் போராளிகளுக்கு ஆதரவு தருவோம் என்று கூறிய திமுக தற்போது போராளிகள் பற்றிய தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இருக்கிறது.
பாமக எம்எல்ஏக்கள் 18 பேரும் ராஜிநாமா செய்யத் தயாரா? என்று அமைச்சர் பொன்முடி கேட்கிறார்.
அவர் முதலில் அமைச்சர் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா? நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கத் தயார்.
பா.ம.க. மோசடி வித்தை செய்வதாகவும் குடும்ப அரசியல் நடத்துவதாகவும் மத்திய அமைச்சர் ராசா கூறியிருக்கிறார்.
மோசடி வித்தையை எந்தத் தலைவர் செய்கிறார், குடும்ப அரசியல் யார் நடத்துகிறார்கள்? யார் யாருக்குப் பதவி கொடுக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரியும்.
தான் செய்த தவறை மறைக்க, நாகரீகம் அற்ற முறையில் வீணாக அவதூறு பரப்புகிறார் ராசா. அன்புமணி, அமைச்சர் பதவி ஏற்றது கட்சியின் பொதுக் குழு, செயற்குழு கூடி எடுத்த முடிவு.
பா.ம.க. தனித்துப் போட்டியிடத் தயாரா? என்று அமைச்சர் துரைமுருகன் கேட்கிறார்.
அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் நாங்களும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று முன்பே ராமதாஸ் அறிவித்து இருக்கிறார்.
1996-ல் பாமக தனித்துப் போட்டியிட்டு 4 இடங்களைப் பெற்றது. ஆனால் தி.மு.க. தனித்து போட்டியிட்டபோது 2 இடங்களை மட்டுமே பெற்றது.
நாங்கள் ஆட்சிக் கலைப்புக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம், அனுமதிக்க மாட்டோம் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறார் என்றார் வேல்முருகன்.