நாடாளுமன்றம் கூடியது-நாளை இடைக்கால ரயில்வே பட்ஜெட்
டெல்லி: நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் நாளை இடைக்கால ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
மே மாதத்தில் புதிய அரசு பதவியேற்ற பிறகு வழக்கமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
தீவிரவாதம், மும்பை தாக்குதல், இலங்கை விவகாரம், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, வேலையிழப்புகள், தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடையிலான மோதல் (தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையும், ஆணையர் நவீன் சாவ்லா மீது காங்கிரஸ் ஆதரவாளர் என்ற முத்திரையும் உள்ளது குறிப்பிடத்தக்கது), மீண்டும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற பாஜகவின் அறிவிப்பு ஆகியவை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும்.
இடதுசாரிகளின் எதிர்ப்பால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் மசோதா உள்பட பல மசோதாக்களை மத்திய அரசு இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளது.
மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அங்கு மீண்டும் அரசு அமைப்பது தொடர்பாக இரு அவைகளிலும் விவாதம் நடத்தி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் ஆண்டுக்காண்டு கட்டணத்தைக் குறைத்து வரும் லாலு, தேர்தலும் வருவதால் அதிரடியாக கட்டணங்களை மேலும் ஒரேயடியாகக் குறைப்பார் என்று கருதப்படுகிறது. இதனால் பாஜக தலைமையிலான கட்சிகள் 'லாலு கலக்கத்தில்' உள்ளன.












Click it and Unblock the Notifications