டெல்லியில் வைகோ உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு
டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
அத்வானி வாழ்த்திப் பேச்சு:
உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,
இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.
பின்னர் வைகோ பேசுகையில்,
பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.
1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.
வைகோ - ராஜ்நாத் சிங் சந்திப்பு
முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.