கருணாநிதிக்கு பிரபாகரன் கடிதம் எழுதவில்லை - புலிகள் மறுப்பு
வன்னி: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடிதம் எழுதியதாகவும், மறைந்த அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்துப் பேசியதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பாலசிங்கத்தின் மனைவியார் அடேல், வாஷிங்டனில் ஹில்லாரியை சந்தித்துப் பேசியதாகவும், அதேபோல பிரபாகரன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதாகவும் சில தமிழக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடேல்- ஹில்லாரி சந்திப்பு குறித்த செய்தியை விடுதலைப் புலிகளின் வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தரப்பில் கூறுகையில், உண்மைக்குப் புறம்பான இவ்வாறான செய்திகள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிப்பதாகவே அமையும்.
போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் ஆர்வத்தில் - சில சமயங்களில் - மீள உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்படும் இவ்வாறன செய்திகள் தமிழர்களுக்கு நன்மை எதனையும் விளைவிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.