பிரிட்டன் நியமித்த சிறப்பு தூதரை நிராகரித்தது இலங்கை
கொழும்பு: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தீர்வு காண இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் நியமித்த சிறப்பு தூதரை ஏற்க முடியாது என இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இது தங்களது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் செயல் எனவும் அது கூறியுள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் அமைதித் தீர்வு ஏற்படுத்துவதற்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிரவுனை, பிரதமர் கார்டன் பிரவுன் நியமித்தார்.
இதை இலங்கை அரசு கண்டித்துள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகல்லகாமா கூறுகையில்,
இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீட்டினை இங்கிலாந்து அரசு மேற்கொள்ள முயற்சிக்கிறது. இலங்கையின் தன்னாட்சி அதிகாரத்திற்கு உள்ள கௌரவத்திற்கு இத்தகைய முயற்சி கேடு விளைவிக்கும்.
இங்கிலாந்து முடிவு தன்னிச்சையானது. அதை இலங்கை அரசு ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.