புலிகள் எதிர்ப்பு-ஞானசேகரனுக்கு மீண்டும் மிரட்டல்
சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவு இயக்கங்களுக்கு எதிராக பேசி வரும் நிலையில் வேலூரில் உள்ள அவரது சட்டமன்ற அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டது.
இதுதொடர்பாக இளம்பாசறை என்ற அமைப்பின் மாநில துணைச் செயலாளர் தேவயின முதல்வன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில், ஞானசேகரனுக்கு நேற்று தபாலில் வந்த ஒரு மிரட்டல் கடிதத்தில்,
''வாசனுக்கு கூஜா தூக்கியும், சோனியாவுக்கு சல்யூட் அடித்தும் பிழைப்பு நடத்தும் ஞானசேகரன் தனது கட்சியுடன் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் எங்கள் அமைப்பை சேர்ந்த நீலசந்திரகுமாரிடம் வாலாட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தாக்கப்பட்டது ஒரு ஒத்திகைதான். நீலசந்திரகுமாரை கைது செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்தால் உனது வீடு சூறையாடப்படும்.
எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் வழக்கு போட்டாலும், எந்த உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
பிழைப்பைத் தேடி வேலூருக்கு வந்த நீ, அரசியலை வைத்து பினாமி பெயரில் சொத்து சேர்த்திருக்கிறாய். உனக்கு தமிழ் உணர்வு பற்றி என்ன தெரியும்? நீ தமிழன கொலையாளி. ராஜபக்ஷேயின் கூட்டாளி.
உன் அரசியல் விளையாட்டை, செல்வாக்கை ரியல் எஸ்டேட் வியாபாரத்தோடு நிறுத்திக்கொள். உனக்கு இதுவே கடைசி எச்சரிக்கை'' என்று கூறப்பட்டுள்ளது.
கடிதத்தை அனுப்பியவர் பெயர் இல்லை. இது குறித்து நேற்று இரவே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் ஞானசேகரன் புகார் செய்தார். இது குறி்த்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.