போயஸ் தோட்டத்தில் குவிந்த கரூர் கவுன்சிலர்கள்
கரூர்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கரூர் கவுன்சிலர்கள் எட்டு பேர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்து அவரிடம் முறையிட முயன்றனர். ஆனால் எதுவாக இருந்தாலும் தலைமைக் கழகத்திற்குப் போய் தெரிவிக்குமாறு கூறி அவர்களை காவலர்கள் திருப்பி அனுப்பி விட்டனர்.
கரூரில் பஸ் நிலையம் அமைப்பது குறித்து, கரூர் நகர் மன்றத்தில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் நகர் மன்றத்தில் அவர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்திற்கு கரூர் நகர் மன்றத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் எட்டு பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
இது குறித்து கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கரூர் சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி அதிமுக தலைமைக்கு புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், கரூர் நகர் மன்றத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் எட்டு பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், கரூர் சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தங்களுக்கு எதிராகவும், தலைமைக்கு தவறான தகவல் கொடுத்துள்ளதாகவும் கூறி, தங்களது நிலைப்பாட்டை விளக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டனுக்கு வந்து மனு அளிக்க அந்த 8 கவுன்சிலர்களும் முடிவு செய்தனர்.
அதன் பேரில் அவர்கள் நேற்று கரூரில் இருந்து சென்னை சென்றனர். ஆனால் அவர்களை போயஸ் கார்டனில் மனு அளிக்க அனுமதிக்கவில்லை.
மாறாக எந்த தகவலாக இருப்பினும் அதிமுக தலைமை கழகத்தில் மனு அளிக்குமாறு திருப்பி அனுப்பினர். இதனால் அதிமுக கவுன்சிலர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications