சிஐஏவின் இயக்குநராக பனீட்டா நியமனம்

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆட்சியின்போது வெள்ளை மாளிகை பணியாளர் குழுத் தலைவராக இருந்தவர் பனீட்டா. இந்த நிலையில் இவரை புதிய சிஐஏ இயக்குநராக ஒபாமா அரசு அறிவித்துள்ளது.
இந்த நியமனத்தை செனட் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்துள்ளது. பனீட்டாவுக்கு புலனாய்வுப் பணியில் நேரடி அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மைக்கேல் ஹெய்டன் சிஐஏ இயக்குநராக இருந்து வந்தார். ஆனால் ஈராக் விவகாரத்தில் அவரது பெயர் கெட்டுப் போனது. மேலும், தீவிரவாதிகள் விசாரணை தொடர்பாகவும் அவரது அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், வர்த்தக அமைச்சர் பதவிக்கு ஒபாமாவால் நியமிக்கப்பட்ட குடியரசுக் கட்சி செனட்டர் ஜட் கிரேக் விலகி விட்டார். இது ஒபாமா அரசுக்கு விழுந்துள்ள இன்னொரு அடியாக கருதப்படுகிறது.
பொருளாதார நலிவைத் தடுக்க ஒபாமா பரிந்துரைத்துள்ள நிதியுதவித் திட்டம் தொடர்பாக கிரேக்குக்கும், ஜனநாயகக் கட்சித் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கிரேக் விலகி விட்டார்.
ஏற்கனவே பில் ரிச்சர்ட்சன் வர்த்தக அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டு விலகினார். இப்போது கிரேக்கும் விலகி விட்டார். வரி கட்டாத பிரச்சினை காரணமாக சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாம் டேஸ்சல்லும் விலகினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications