மோசடி: 'இந்தியன் பேங்க்' கோபாலகிருஷ்ணன் மனு தள்ளுபடி!
இந்தியன் வங்கி தலைவராக கோபாலகிருஷ்ணன் இருந்தபோது வரைமுறையே இல்லாமல் பல நிறுவனங்களுக்கு கடன் தாராளமாக அளிக்கப்பட்டது. இவரை ஒரு விழாவுக்கு அழைத்தால் போதும் அங்கேயே விழாவை நடத்துவோருக்கு சில கோடி, லட்சங்களை அள்ளித் தருவார்.. எல்லாம் வங்கிப் பணம் தான்.
தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் தினமும் டி.டியில் இவர் இல்லாத நாளே இருக்காது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி.. அங்கே இவர் வழங்கும் கொடை செய்தியாக வரும்.
யாருக்கும் இல்லை என்று சொல்லும் மனம் இல்லாத சினிமாகாரர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் மொய்த்து எடுத்ததால் வங்கியே கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குப் போனது. பின்னர் மத்திய அரசு தலையிட்டு வங்கிக்கு நிதியுதவி செய்து காப்பாற்றியது.
இந்த கடன் மோசடி தொடர்பாக கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால் அங்கு அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை, நீதிபதிகள் அரிஜித் பசாயத், முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பணி தொடர்பான நல்ல செயல்களுக்கு மட்டுமே, முன்அனுமதி' என்ற விதிமுறை பொருந்தும். ஊழல் என்பது அரசு ஊழியரின் அதிகாரப்பூர்வ பணி கிடையாது. அப்படி அரசு ஊழியர்கள் கூறுவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இதை பிரகாஷ்சிங் பாதல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பார்வையில் பலவீனம் இல்லை. அதனால் அதன் உத்தரவில் நாங்கள் தலையிட தேவையில்லை. இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர்.
இடையில் அரசியலுக்கு வரப் போவதாகவும் இவர் முஸ்தீபு காட்டியதும் நினைவுகூறத்தக்கது.