பார்வையற்ற பட்டதாரிகளிடம் கல்வித்துறை மோசடி
மதுரை: பார்வையற்ற ஆசிரியர் பயிற்சிபெற்ற பட்டதாரிகளிடம் தமிழக கல்வித்துறையே மோசடி செய்துள்ளது கண்டனத்திற்குரியது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூறியுள்ளது. மேலும் இப் பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ். ஜி. ரமேஷ்பாபு, மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசுப் பள்ளிகளில் 6,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு பார்வையற்ற ஆசிரியர் பயிற்சி பெற்றபட்டதாரிகளுக்கானது. இப் பணியிடங்களை பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்காமல் மோசடி நடந்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டில் நடந்துள்ள மோசடியை எதிர்த்தும், வேலை வாய்ப்புகள் கோரியும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட 32 பார்வையற்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதே போன்று, டிபிஐ அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்த போதும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களை இரவு 10 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. பார்வையற்ற இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அரசின் செயல் கண்டனத்திற்குரியது.
இப் பிரச்சனையில், தமிழக முதல்வர் கருணாநிதி உடனே தலையிட்டு பார்வையற்ற இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட உதவ முன் வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications