தமிழக அரசை மத்திய அரசு மதிக்கவே இல்லை: நல்லகண்ணு
தென்காசி: இலங்கை விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு மதிக்கவே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
தென்காசி வந்த நல்லகண்ணு அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை நிறுத்திட உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகள் கண்டன குரல் எழுப்பி வருகின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் கூட சிறப்பு தூதர் அனுப்பி பேச்சு வார்த்தை நடத்திட வலியுறுத்தியுள்ளார். ஆனால் இலங்கை அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படி செய்ய முடியாது என கூறியுள்ளது.
உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டும் இலங்கையில் அப்பாநி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும். மேலும் இந்திய அரசு போர் ஆயுதம், ரேடார் கருவி, மற்றும் பயிற்சி அளிப்பதை நிறுத்திட வேண்டும். போரை நிறுத்தி இரு தரப்பினரும் சுமூக நிலை ஏற்பட வழிவகுக்க வேண்டும்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் 3 முறை தீர்மானம் நிறைவேற்றி பிரதமரை அனைத்து கட்சியனரும் சந்தித்து வலியுறுத்தியும் இலங்கையில் தமிழர்கள் நடக்கும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை.
நம் தேசத்திற்கு எதிரான சில நாடுகள் இலங்கைக்கு உதவி வருகிறது. ஆனால் இந்தியாவும் இலங்கைக்கு உதவி வருகிறது. தமிழகத்தை மத்திய அரசு மதிக்காமல் செயல்படுகிறது.
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டு அகதிகளாக தமிழகம் நோக்கி ஓடி வருகிறார்கள். தமிழக முதல்வர் இலங்கை பிரச்சனையில் முன்பு காட்டிய அக்கறையை அனைவரும் அறிவர். ஆனால் இன்றைய நிலை எப்படி, கலைஞர் மத்திய அரசிடம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொத்து கொத்தாக விழும் குண்டுகளால் உயிர் நீக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
தற்போது பெங்களூரில் சிங்கள ராணுவத்தினருக்கு அளிக்கும் பயிற்சியை நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றார் அவர்.