வேலை போன விரக்தியில் பிரதமரின் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு
டெல்லி: வேலை போய்விட்டதால் மனமுடைந்த இந்திய இளைஞர் ஒருவர் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் எதிரே தீக்குளித்தார். 100 சதவிகித காயங்களுடன் அவர் மருத்துவமனையில் போராடிக் கொண்டுள்ளார்.
அந்த இளைஞரின் பெயர் அபிஷேக் சௌபே. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். குவைத்தைச் சேர்ந்த ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது அந்த நிறுவனம்.
இதனால் மாற்று வேலைக்கு பல வழியிலும் முயன்ற அபிஷேக், அது முடியாமல் போனதால், பிரதமர் அலுவலகத்தில் முறையிட முடிவு செய்தார். ஆனால் அவரது மனுவை யாரும் வாங்கிக் கொள்ளக் கூட தயாராக இல்லையாம்.
இதனால் மனமுடைந்த அவர், நேற்று மாலை 3.30 மணிக்கு விஜய் சௌக்கில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகில், பிரதமரின் அலுவலகம் எதிரே உடலில் மண்ணெண்ணை ஊற்றி, தீவைத்துக் கொண்டார். அடுத்த 5 நிமிடங்களில் உடல் எரிந்து கருகியது.
ஆனால் இதை பார்த்துக் கொண்டிருந்த பலரும், ஒதுங்கி நின்று கொண்டனர். குறிப்பாக பிரதமர் அலுவலக காவலர்கள் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். அவர்களில் ஒருவர் பக்கத்து ஸ்டேஷனுக்கு தகவல் மட்டுமே தெரிவித்தார். இத்தனைக்கும், அந்த இளைஞர் மண்ணெண்ணை கேனுடன் பிரதமர் அலுவலகம் முன் வந்து நின்று 10 நிமிடம் வரை கோஷங்கள் எழுப்பியுள்ளார்.
பின்னர் சில நிமிடங்களில் போலீசும் தீயணைப்பு வண்டியும் வந்தது. தீ அணைக்கப்பட்ட போது 100 சதவிககித காயம் அடைந்து மோசமான நிலையிலிருந்தார் அபிஷேக். இப்போது ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிழைக்க வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் விசாரித்த போது, அந்த இளைஞர் பிரதமர் அலுவலகத்தில் எந்த மனுவும் கொடுக்கவில்லை என்றும், தீக்குளிப்பதற்கு முன் ஏதோ விளையாட்டாகக் கத்திக் கொண்டிருக்கிறார் என நினைத்துவிட்டோம் என்றும் பதில் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications