பிரபாகரன் மகன் சார்ல்ஸ் அந்தோணி தலைமையில் போர் புரியும் புலிகள்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகனான சார்ல்ஸ் அந்தோணி தலைமையி்ல தற்போது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் சண்டையிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிரபாகரன் வன்னிப் பகுதியில்தான் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்திடம் சரணடைந்ததாக கூறப்படும் இரு தற்கொலைப் படை விடுதலைப் புலிகள் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழ் கூறுகிறது.
இவர்கள் இருவரும் ஜனவரி 28ம் தேதி தெருமுரிகண்டி என்ற இடத்தில் ராணுவத்திடம் சரணடைந்தனராம். இரணமடு குள அணைக்கட்டை தகர்க்க முயன்றபோது ராணுவத்தினரிடம் சிக்கியதால் சரணடைந்தார்களாம்.
இருவரும் சண்டே அப்சர்வருக்கு அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகள் தற்போது சார்ல்ஸ் அந்தோணி தலைமையில் போரிட்டு வருகின்றனர்.
புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களான பானு, லட்சுமணன் ஆகியோருடன் இணைந்து சார்ல்ஸ் அந்தோணி செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளனர்.
2006ம் ஆண்டு அயர்லாந்திருந்து இலங்கை திரும்பினார் சார்ல்ஸ் அந்தோணி. ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்துள்ளார் சார்ல்ஸ். புலிகள் அமைப்பின் விமானப் பிரிவுக்கும், கம்ப்யூட்டர் பிரிவுக்கும் அவர் தான் தலைவராக உள்ளார்.
சார்ல்ஸ் அந்தோணிதான் புலிகள் அமைப்பின் விமானப்படையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே விமானப்படையை கொண்டிருக்கும் ஒரே போராளி இயக்கம் எல்டிடிஇ மட்டுமே.
2007ம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை புலிகள் தங்களது விமானம் மூலம் தாக்கி உலக நாடுகளை அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.