சோனியா உருவ பொம்மை எரிப்பு; வக்கீல் கைது
சென்னை: இலங்கை தமிழருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக கருதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ பொம்மை மற்றும் அக்கட்சியின் கொடி ஆகியவற்றை எரித்த வழக்கறிஞர் விஜயேந்திரன் கைது செய்யப்பட்டார்.
இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாததை கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கடந்த 11ம் தேதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயேந்திரன் தலைமையில் 15 வழக்கறிஞர்கள் சென்னை என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ பொம்மை மற்றும் அக்கட்சியின் கொடி ஆகியவற்றை எரித்தனர். இதையடுத்து இவர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மறுநாளும் சோனியாவின் உருவ பொம்மை மற்றும் காங்கிரஸ் கட்சி கொடி ஆகியவை எரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கறிஞர்களை கைது செய்ய தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பம்மலில் தங்கியிருந்த வழக்கறிஞர் விஜயேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவர் 16-வது பெருநகர குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.