இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுங்கள் - விஜயகாந்த் ஆவேசம்

தேமுதிக கட்சி பிரமுகர் தட்சிணா மூர்த்தியின் மகளின் திருமணம் இன்று ராமநாதபுரத்தில் நடந்தது. அதில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் இலவச கணினி பயிற்சி மையத்தையும் துவக்கி வைத்தார்.
பின்னர் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,
இதுவரை ஆண்ட கட்சிகளும் தற்போது ஆளும் கட்சியும் ராமநாதபுரத்தை வறண்ட மாவட்டமாக ஆக்கிவிட்டன. அதனை வளம் மிகுந்த மாவட்டமாக மாற்ற முடியும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக காங்கிரசுடனும், திமுகவுடனும் கூட்டணி சேரப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவருகிறது. ஆனால் நாங்கள் யாருடனும் கூட்டணி சேரப் போவதில்லை.
தேமுதிக சின்ன கட்சி என்று சொன்னவர்கள், அந்த கட்சியின் கூட்டணி நிலை குறித்து விரிவாக எழுதுகின்றன. இது நம்பர் 1 கட்சியாக தேமுதிக வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.
ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
கருணாநிதி கருப்புச் சட்டை போடாதது ஏன்?
கருணாநிதி இன்று அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்கிறார். ஈழத்தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோது, கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை.
இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இலங்கையிடம் கத்தி - புலிகளிடம் கேடயம்
இலங்கை அரசு கத்தி வைத்துள்ளது. புலிகளிடம் கேடயம் தான் உள்ளது. அதை வைத்து இலங்கையின் போரை புலிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கேடயத்தை போடு என்று சொன்னால் கத்தி வைத்திருப்பவன் சும்மா இருப்பானா?
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐநாவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் தந்திகளும், எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டும். இரண்டு நாளில் நான் அதற்கான முகவரியை தருவேன்.
அமெரிக்க தூதரகத்தில் மனு
வரும் 21ம் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது இங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்.
பதவியை துறந்தால் தனி ஈழம் கிடைக்குமா என்று முதலமைச்சர் கேட்கிறார். இதிலிருந்தே தனிஈழம் கிடைக்காது என்று அவர் எண்ணுகிறார் என்பது தெரிகிறது. 2 மாதத்தில் முடிய போகின்ற மத்திய அரசிலில் இருந்து நாங்கள் பதவி விலகினால் என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறார்கள்.
பிரதிபலன் பாராமல் பாடுபடுபவர் நெடுமாறன் மட்டுமே
எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் பதவியில் இருந்து கொள்ளையடிக்கவே அவர்கள் எண்ணுகிறார்கள்.
இலங்கை பிரச்சனையில் பிரதிபலன் எதிர்பாராமல் அன்றிலிருந்து பாடுபடுபவர் நெடுமாறன் ஒருவர் தான். அவரை நான் பாராட்டுகிறேன். மதிக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற இலங்கை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள்.
கருணாநிதி நான் உழைக்கவே பிறந்தவன் என்கிறார். ஜெயலலிதாவோ முற்றும் துறந்த துறவி என்கிறார். முற்றும் துறந்தவருக்கு முதல்வர் பதவி எதற்கு?
திருமங்கலத்தில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். ரேஷனில் ஒரு ரூபாய் அரிசி போடுகிறார்கள். ஆனால், 50 ரூபாய் பொருட்கள் வாங்கினால் தான் ஒரு ரூபாய் அரிசி தருவேன் என்று கடைக்காரான் சொல்கிறான் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications