பட்ஜெட்: இது தேர்தல் 'லாலிபாப்'!
டெல்லி: இடைக்கால பட்ஜெட் மிகச் சிறப்பானது. அடுத்த லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவும் என காங்கிரஸ் கட்சியும், இது தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.
பிரணாப் முகர்ஜி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இந்த பட்ஜெட்டை உற்று நோக்கினால் யாருமே பாராட்டத்தான் செய்வார்கள்.
இது இடைக்கால பட்ஜெட். ஜூன் மாதம் நாங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் இன்னும் சிறப்பான பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்.
அரசின் முன்ணனித் திட்டங்கள், மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட திட்டங்கள், சென்செக்ஸ், சமூகம், ஆரோக்கியம், கல்வி, ஊரக வளர்ச்சி என அனைத்துப் பிரிவினைரயும் திருப்திப்படுத்தும் பட்ஜெட் இது.
இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே யாரும் விதி மீறல் என குற்றம் சாட்ட முடியாது. தேர்தலுக்காகவே தயாரிக்கப்பட்ட பட்ஜெட் எனவும் யாரும் குறை கூற முடியாது என்றார்.
அதேசமயம், தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. மக்கள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் இந்த பட்ஜெட் கூறவில்லை என்றும் அவை விமர்சித்துள்ளன.
சிபிஐ மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், நாடாளுமன்றத்தில் தனது முதல் தேர்தல் பேச்சை தொடங்கியுள்ளார் பிரணாப் முகர்ஜி. என்ன, வேட்பாளர்கள் பெயரைச் சொல்லவில்லை, தேதியை அறிவிக்கவில்லை, அவ்வளவுதான்.
முதலில் லாலு பிரசாத் யாதவின் லாலி பாப்பைப் பார்த்தோம். இன்று பிரணாப் முகர்ஜி லாலிபாப் கொடுத்துள்ளார். இது கண்டிப்பாக தேர்தல் மிட்டாய் என்பதில் சந்தேகமே இல்லை என்றார்.
பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், அரசின் பற்றாக்குறை கணக்கு வழக்கைப் பார்த்தால் சத்யம் நிறுவன பாலன்ஸ் ஷீட் போல தோன்றுகிறது.
தன்னைத் தானே இந்த அரசு பாராட்டிக் கொள்கிறது. உலகின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாம் இருக்கிறோம். ஆனால் அரசே, வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினை குறித்து யோசிக்கவே இல்லை என்றார்.
சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், இதை தேர்தல் அறிக்கை போலவே உள்ளது. தனது கடைசி பட்ஜெட்டை, தேர்தல் அறிக்கை போல தயாரித்து வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
பொருளாதார சீர்குலைவு குறித்து எந்த திட்டத்தையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவிக்கவில்லை. பட்ஜெட்டில் அதுகுறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
கிட்டங்கிகள் எல்லாம் நிரம்பியுள்ளது, தானிய உற்பத்தி பெருகியுள்ளது என்கிறது அரசு. ஆனால் சமையலறையில் இன்னும் பற்றாக்குறைதான் உள்ளது. உணவு தானிய விநியோகத்தில் மிகப் பெரிய வீழ்ச்சியும், தடங்கலும் காணப்படுவதை அரசு மறைத்து விட்டது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது அரசு. உண்மையான பிரச்சினைகளை அது கவனிக்கவே இல்லை, கவலை கொள்ளவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications