ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி கர்நாடக தமிழர்கள் பெங்களூரில் பிரமாண்ட பேரணி
இதுவரை கர்நாடகத்தில் தமிழர்கள் இந்த அளவுக்கு திரண்டு பேரணி நடத்தியது இல்லை.
பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பேரணிக்காக தமிழ் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அல்சூரில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ். பள்ளி மைதானத்தில் திரண்டனர்.
தமிழ்ச்சங்க செயலாளர் கோ.தாமோதரன் பேரணிக்கு தலைமை தாங்கினார். பேரணியை டாக்டர் மோகன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பேரணி புறப்பட்டது.
இதில் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.சி.மோகன், நிர்மல்குமார் சுரானா, கன்னட திரைப்பட இயக்குனர் கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் மா.பாரி, நிரஞ்சன்ராம், மாரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெங்களூரில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியில் கறுப்பு கொடிகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவத்தை அரக்கன் போல சித்தரித்த பேனர்களையும் கையில் பிடித்தபடி சென்றனர்.
ராஜபக்சேயை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை தியாகம் செய்த முத்துக்குமார் போன்றோரின் உருவப்படத்தை எடுத்து வந்தனர்.
பெண்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். பலர் குடும்பத்துடனும், தங்களது கைக்குழந்தைகளுடனும் கலந்து கொண்டனர். பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
டிக்கன்சன் சாலை, காமராஜர் சாலை, கப்பன்சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றது. பேரணியின்போது ராஜபக்சே கொடும்பாவி தீ வைத்து எரிக்கப்பட்டது.
வழிநெடுக ராஜபக்சேயின் உருவப்படங்களை தீவைத்து கொளுத்தியவாறு சென்றனர். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் அருகே பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து தமிழ்ச்சங்க செயலாளர் கோ.தாமோதரன் தலைமையில், தமிழ்ச்சங்க பொருளாளர் சம்பத், துணை தலைவர் விவேகானந்தன், நிர்வாகி ராமச்சந்திரன், நாடார் சங்க முன்னாள் தலைவர் பழனிசாமி நாடார் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரியும், உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.













Click it and Unblock the Notifications