Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோனியாவை சுற்றி தவறான ஆலோசகர்கள்-அமர்சிங்

Subscribe to Oneindia Tamil

Amar Singh
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவருடன் இருக்கும் ஆலோசகர்கள் தப்புத் தப்பாக ஆலோசனை கூறிக் கொண்டிருக்கின்றனர் என்று சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாக கூறியுள்ளார் அமர்சிங். சரத்பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை சமாஜ்வாடி கட்சி ஆதரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளதால், காங்கிரஸ், சமாஜ்வாடி இடையிலான உரசல் மேலும் அதிகரித்துள்ளது.

அமர்சிங்கின் பேட்டியிலிருந்து சில பகுதிகள் ...

கேள்வி: நீங்கள் ஒரு சந்தர்ப்பவாதி என்ற குற்றச்சாட்டு நிரந்தரமாக உள்ளது. (அயோத்தி விவகாரத்தில்) முஸ்லீம்களை கைவிட்டு விட்டீர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நீங்கள் தவறு செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

அமர்சிங்: நான் அப்படி எந்த தவறையும் செய்யவில்லை. கல்யாண் சிங்கை நாங்களாக கட்சிக்கு அழைக்கவில்லை. அவராகத்தான் தனது கொள்கைகளை விட்டு விட்டு, எங்களுக்கு ஆதரவு தர முன்வந்தார். பாஜகவை தீர்த்துக் கட்டுவது என்ற முடிவையும் அவராகத்தான் எடுத்தார். அந்த அடிப்படையில் முலாயம் சிங் யாதவின் கரத்தை வலுப்படுத்தவும் அவர் தீர்மானித்தார்.

எனவே அமர்சிங்கும், முலாயம் சிங் யாதவும் முஸ்லீம்களை கைவிட்டு விட்டார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே எங்கு வந்தது சந்தர்ப்பவாதம்?.

ஒரு வேளை எங்களது கட்சியில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாக இருப்பதால் இப்படி ஒரு சந்தேகம் எங்கள் மீது வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் எங்களது கட்சியில் சீட் கேட்டு மறுக்கப்பட்டதால் வெளியேறியவர்கள். எங்களது கட்சியின் 'கேஷுபாய் படேல்கள்' அவர்கள்.

கேள்வி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கல்யாண் சிங், எனது வாழ்க்கையின் பெருமையான நேரம் இது என்றார். பத்து ஆண்டுகள் கழித்து லிபர்ஹான் கமிஷன் முன்பு சாட்சியம் அளித்தபோது, நான் செய்தது எல்லாம் சரியே. அந்த நாளில் நடந்த எல்லாமே எனக்கு எந்த வருத்தத்தையும் தரவில்லை. அதனால் எனக்கு வருத்தமோ, கவலையோ, குற்ற உணர்ச்சியோ இல்லை என்றார். உங்களது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொள்கிறீர்களே...

அமர்சிங்: உங்களது கருத்தை முழுமையாக ஏற்கிறேன். ஆனால் இப்போது நாம் கொஞ்சம் பின்னோக்கிப் போக வேண்டும். நான் சோனியா காந்தி குறித்து முன்பு ஒரு கருத்து தெரிவித்திருந்தேன்.

அப்படிக் கூறிய நான் சோனியா காந்தியுடன் இணைந்து செயல்பட முடியாது. எனக்கு சோனியா குறித்து அவ்வளவாகத் தெரியாது. காங்கிரஸுடன் எனக்கு சந்தோஷமான உறவு இல்லை.

இருப்பினும், சோனியா காந்தி மோசமான பெண்மணி இல்லை என்ற கருத்தையே இப்போதும் நான் சொல்கிறேன். ஆனால் அவரைச் சுற்றி இருப்பவர்கள்தான் தப்புத் தப்பான ஆலோசனைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: அப்படியானால் கல்யாண் சிங்கும் மோசமான நபர் இல்லை என்கிறீர்களா..?

அமர்சிங்: இல்லை, நான் அப்படிச் சொல்ல வரவில்லை. அத்வானியின் கருவி மட்டுமே கல்யாண் சிங். இந்துத்வா அரசியலின் கருவிதான் கல்யாண் சிங். கலிங்கத்து வன்முறைக்குப் பின்னர்தான் அகிம்சையின் மகத்துவத்தை உணர்ந்தார் அசோகர் என்பது வரலாறு.

கேள்வி: கல்யாண் சிங்கை, அசோகருடன் ஒப்பிடுகிறீர்களா?

அமர்சிங்: இல்லை, நான் சூழ்நிலைகளை ஒப்புமைப்படுத்தி சொல்கிறேன்.

கேள்வி: இது சுத்தமான சந்தர்ப்பவாதம் இல்லை?

அமர்சிங்: அப்படி நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால் கல்யாண் சிங்கின் ஒப்புதல் வாக்குமூலமாக, அவருக்கு அவரே கொடுத்துக் கொள்ளும் தண்டனையாக நான் கருதுகிறேன்.

கேள்வி: இதற்கு என்ன ஆதாரம்?

அமர்சிங்: எனது தந்தைக்கு நான் தான் மகன் என்பதற்கு என்ன ஆதாரம்?

கேள்வி: உங்களது தாயார்தான் ஆதாரம்.

அமர்சிங்: சரி. கல்யாண் சிங் தனது ஒரே மகன் ராஜ்வீர் சிங்கை சமாஜ்வாடி கட்சியில் சேர்த்து, இதுதான் உனது வீடு என்றார். மேலும், எந்தவித நிபந்தனையையும் அவர் போடவில்லை.

எனவே நாங்கள் அவரை இழுத்தோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியைப் போல அவர் நிபந்தனை எதையும் போடவில்லை, 20 சீட் வேண்டும், 30 சீட் வேண்டும் என்றும் அவர் கேட்கவில்லை.

கேள்வி: 2007ம் ஆண்டு ராஜ்வீர் சிங் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். அவரது மனைவியும் கூட அதே கட்சி சார்பில் போட்டியிட்டார். இப்போது ராஜ்வீர் சிங்கை உங்களது கட்சியின் பொதுச் செயலாளராக்கியுள்ளீர்கள். ஒரு வேளை நாளை ராஜ்நாத் சிங்கையும், அத்வானியையும் கூட உங்களது கட்சியில் ஏற்றுக் கொள்வீர்களா..

அமர்சிங்: கண்டிப்பாக நான் அதைச் செய்வேன். ராஜ்நாத், அத்வானி மட்டுமல்ல, பால் தாக்கரேவையும் கூட விட மாட்டேன். இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு குறித்த தனது நிலையை தாக்கரே மாற்றிக் கொண்டால், அவரையும் எங்களது கட்சியில் இணைத்துக் கொள்வோம்.

மும்பை வன்முறை மீண்டும் வரக் கூடாது, அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படக் கூடாது என்று நான் கருதுகிறேன். தனது பாதையை பால் தாக்கரே மாற்றிக் கொள்ள முன்வந்தார் என்றால் நிச்சயம் அவரை நாங்கள் சேர்த்துக் கொள்வோம். அதேபோல அத்வானியும் தனது நிலையை மாற்றிக் கொண்டால் அவரையும் சேர்த்துக் கொள்வோம்.

கேள்வி: முஸ்லீம்கள், உங்களுடன் கல்யாண் சிங் சேர்ந்திருப்பதை உறுத்தலாக பார்க்க மாட்டார்களா..

அமர்சிங்: நரேந்திர மோடி முஸ்லீம்களின் மனதில் ஏற்படுத்திய வலியை நினைத்துப் பாருங்கள். கல்யாண் சிங்குடன் ஒப்பிடுகையில் மோடிதான் மிகப் பெரிய வில்லன். கல்யாண் சிங் விவகாரம் மிக மிகப் பழையது. ஆனால் நரேந்திர மோடி ஏற்படுத்திய பாதிப்புதான் மிக மிகப் புதிது.

கேள்வி: முஸ்லீம்களின் மன நிலையிலிருந்து சொல்லுங்கள், நீங்கள் செய்தது தவறில்லையா?

அமர்சிங்: இல்லை, இது தவறே இல்லை. காவிப் பரிவாரத்தின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியே இது.

கேள்வி: சரி, காங்கிரஸ் குறித்து கூறுங்கள்..

அமர்சிங்: காங்கிரஸ் கட்சியுடன் மிகப் பெரிய அளவிலான உறவு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

கேள்வி: அப்படியானால் உறவு முறியும் நிலைக்கு வந்து விட்டதா?

அமர்சிங்: இல்லை. நான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பேன் என பிரகடனமே செய்துள்ளேன். எனவே மக்கள் மனதில் கோமாளியாக என்னை உருவகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டேன். இடத்தைக் காலி செய்யுங்கள் என்று சோனியா காந்தியாக பார்த்து எங்களிடம் கூறும் வரை நாங்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்போம். நாங்கள் அவர்களை கைவிட மாட்டோம்.

கேள்வி: ஆனால், சோனியா காந்தி, மன்மோகன் சிங் தவிர காங்கிரஸ் கட்சியும் கூட உங்களைப் புண்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்களே..

அமர்சிங்: அதற்குக் காரணம், எனது முதுகெலும்பு சற்று வலுவானது என்பதால் இருக்கலாம்.

கேள்வி: அவர்களுக்கு உறுதியான மனிதர்கள் பிடிக்காது என்கிறீர்களா?

அமர்சிங்: அப்படி நினைக்கவில்லை. ஆனால் சோனியா காந்தியைச் சுற்றிலும் உள்ள ஆலோசகர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. சுய கருத்துடன் கூடிய யாரையும் அவர்களுக்குப் பிடிக்காது. அம்பிகா சோனிக்கு நடந்த கதைதான் தெரியுமே.

கேள்வி: அம்பிகா சோனிக்கு என்ன பிரச்சினை?

அமர்சிங்: சோனியா காந்தியின் உள் வட்ட நம்பிக்கைக் குழுவில் அவரும் ஒருவராக இருந்தார். ஆனால் இப்போது அதிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்றார் அமர்சிங்.

முன்னதாக நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அமர்சிங் சந்தித்துப் பேசினார்.

பின்னர் இதுகுறித்து கூறுகையில்,

தற்போதைய நிலையில், மன்மோகன் சிங்கே பிரதமர் பதவி வேட்பாளர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தால், அவர் இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

தேநேரத்தில், சரத்பவாரோ அல்லது முலாயம் சிங்கோ பிரதமராகும் வாய்ப்பு உருவானால், அதையும் சமாஜ்வாடி கட்சி ஆதரிக்கும். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவே சமாஜ்வாடி கட்சி விரும்புகிறது என்றார் அமர்சிங்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திரிபாதி கூறுகையில், மகாராஷ்டிராவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதற்காக ஒருமித்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளின் தலைவர்களுடன் சரத்பவார் பேசி வருகிறார்.

காங்கிரசும் மற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலை.

ஆனால், தேசிய அளவில் கூட்டணி இல்லை என, காங்கிரஸ் அறிவித்து விட்டதால், மகாராஷ்டிராவில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தி வருகிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+