கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கம் புதுக் கட்சி
கோவை: கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளது. இக்கட்சிக்கு கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை என பெயரிடப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகேயுள்ள கணியூரில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை சார்பில் பிரமாண்டமாக நடந்த முதல் அரசியல் எழுச்சி மாநாட்டில் இந்தக் கட்சி தொடஙேகப்பட்டது.
பேரவையின் மாநில தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். பேரவையின் பொதுச்செயலாளர் என்ஜினீயர் ஈஸ்வரன், கெளரவத் தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டுக் குழு தலைவர் ஜி.கே.நாகராஜ் வரவேற்று பேசினார்.
மாலையில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேடையின் பின்புறத்தில் வைக்கப்பட்டு இருந்த திரை விலகியது. அதில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை' என்று எழுதப்பட்டிருந்த பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கட்சியின் புதிய கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலே பச்சை, நடுவில் மஞ்சள், கீழே சிவப்பு வண்ணங்களுடன் கூடிய மூவர்ண கொடியை கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் முன்னணி நிர்வாகிகள் தூக்கிப் பிடித்தனர்.
மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பேரவையின் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறுகையில்,
கொங்கு வேளாள கவுண்டர் பேரவை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிக பெரிய அளவில் வளர்ச்சி பெற்று உள்ளது. இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளார்.
இந்த மாநாட்டு வாயிலாக வலியுறுத்தப்படும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும். அவற்றை நிராகரித்தால் அடக்க முடியாத புரட்சி ஏற்படும் என்றார்.
12 தொகுதிகளில் தனித்துப் போட்டி:
பின்னர் பெஸ்ட் ராமசாமியும், பொதுச் செயலாளர் ஈஸ்வரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த மாநாடு. நாங்கள் 12 தொகுதிகளில் போட்டியிடுவோம். கூட்டணி பற்றிய எண்ணம் எங்களுக்கு இல்லை.
கொங்கு மண்டலம் 10 மாவட்டங்களாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 சதவீதம் கொங்கு இன மக்கள் உள்ளனர். அதனால் நாங்கள் 12 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்றனர்.












Click it and Unblock the Notifications