பெற்ற குழந்தையை கூவி விற்ற தாய்!
விழுப்புரம்: வறுமையின் காரணமாக, பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தையை கடைவீதியில் பெற்ற தாயே விற்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கடமங்கலம் அருகே உள்ளது துலுக்காநத்தம் காலனி. இந்த காலனியைச் சேர்ந்தவர் வி்ஸ்வநாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி லலிதா (35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாக்கம் கூட்டு ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனையில் லலிதாவுக்கு நான்காவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பெண் குழந்தை பிறந்தது பற்றி கணவருக்கு தெரியவந்தால் அவர் திட்டுவார் என்று அச்சம் கொண்ட லலிதா அந்த குழந்தையை விற்க முடிவு செய்து, அந்த பச்சிளம் குழந்தையுடன் கடலூருக்கு வந்தார்.
கடலூர் டவுன்ஹால் எதிரே பாரதிசாலையில் சென்றவர்களிடம் குழந்தை வேண்டுமா குழந்தை வேண்டுமா என்று கூவி கூவி சத்தமிட்டார்.
அதிர்ச்சி அடைந்த சிலர் அவரிடம் என்ன ஏது என்று கேட்டபோது, ரூ 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் குழந்தையை தருவதாக கூறினார். இத் தகவல் ஊருக்குள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, பெற்ற குழந்தையை விற்பனை செய்ய முயன்ற லலிதாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு லலிதாவிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தீவிர விசாரணை நடத்தினார்.
அப்போது, தாங்கள் ஏற்கனவே வறுமையால் வாடி வருவதாகவும், இந்த நிலையில் தங்களுக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதை வளர்க்க முடியாததால் விற்க முயன்றதாக கூறினார்.
இதையடுத்து லலிதாவும், அவரது குழந்தையையும் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.
அப்போது, இந்த குழந்தையை வளர்க்க கூடிய சூழ்நிலை தங்களுக்கு இல்லை இதனால் இந்த குழந்தையயை எடுத்து வளர்க்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரியிடம் லலிதா கெஞ்சினார்.
இதனால் லலிதாவுக்கு பிறந்த அந்த 4-வது குழந்தையை அரசு தொட்டில் அதிகாரிகள் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications