ராமதாஸ் வெளியிட்ட பாமகவின் நிழல் பட்ஜெட்
சென்னை: தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பாமக நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதை பின்பற்றி தமிழக அரசு பட்ஜெட் வெளியிட்டால் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2009-10ம் ஆண்டுக்கான பாமகவின் நிழல் பட்ஜெட் கட்சியின் நிறுவனர் ராமதாசால் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அவருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, நாடாளுமன்ற குழு தலைவர் ராமதாஸ் எம்.பி., ஏ.கே.மூர்த்தி எம்.பி., வேல்முருகன் எம்எல்ஏ இருந்தனர்.
ராமதாஸ் கூறுகையில்,
தமிழக அரசுக்கு பாமகவின் ஆலோசனைகளாக ஏழாவது ஆண்டாக நிழல் பட்ஜெட் வெளியிட்டுள்ளோம். தமிழக பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்களை விவரமாக வழங்கியுள்ளோம். எங்கள் ஆலோசனைகள் முழுவதையும் இந்த அரசு ஏற்று கொண்டால் நன்றாக இருக்கும்.
மத்திய அரசு போல் தமிழக அரசும் பொருளாதார அறிக்கையை வெளியிடவேண்டும். தமிழ்நாட்டில் வறுமை, வேலை இல்லாத்திண்டாட்டம், விலைவாசி உயர்வு, இயற்கை சீற்றம் என 25க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனால் தமிழக அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படலாம். ஆனால் அந்த இழப்பை சரிகட்ட பல வழிமுறைகள் உள்ளன.
வரி வருவாய் மூலமும் வரி அல்லாத வருவாய் மூலமும் வருமானத்தை பெருக்கலாம். மத்திய அரசு வசூலிக்கும் சேவை வருவாயை தமிழக அரசுக்கே திருப்பி கொடுக்கவேண்டும். கடுமையான நடவடிக்கை மூலம் வரி ஏய்ப்பை தடுக்க முடியும்.
மத்திய விற்பனை வரியை விலக்கி கொள்ளுதல், வணிக வரித்துறையை சீரமைத்தல், முத்திரைத்தாள் பதிவுக்கட்டணத்தை சீரமைத்தல், கடன்களை மாற்றியமைத்தல், வருமானவரித்துறையை முழுமையாக மாற்றிஅமைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.
நிலுவை பாக்கியை வசூல் செய்வதன் மூலம் கூடுதல் வருவாயை பெருக்கலாம். விற்பனை வரிச்சீர்திருத்தங்கள் சலுகை திட்டம், மின்னணு வர்த்தகத்தை தவிர்த்தல், கிரானைட் குத்தகையை சீர்திருத்துதல், மணல் திருட்டை தடுத்தல் உள்பட நிறைய வழிகள் இருக்கிறது.
நாம் மத்திய அரசுக்கு செலுத்தும் சேவை வரியை அப்படியே வாங்கினால் 5 ஆயிரம் கோடி கிடைக்கும். வருமானவரியில் உள்ள நிலுவையை வசூலித்தால் 8 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். எனவே மதுவிலக்கை அமல்படுத்த வழி உள்ளது.
எழும்பூர்-சென்ட்ரல் ரயில் நிலையத்தை இணைப்பதற்கு மாநில அரசின் தடையில்லா சான்று கிடைக்கவில்லை. இதனால் அந்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இத்திட்டத்தை விரைவில் முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுவை அரசியல் ரீதியாக பயன்படுத்தக்கூடாது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடவேண்டும்.
பாமகவின் நிழல் பட்ஜெட் படி தமிழக அரசின் 2009-10 ஆண்டு வருவாய் வரவு ரூ.57 ஆயிரத்து 816 கோடியே 66 லட்சம். செலவு ரூ.57 ஆயிரத்து 762 கோடி. பட்ஜெட்டில் அதிக பட்சமாக வேளாண்மைக்கு ரூ.4 ஆயிரத்து 740 கோடி ஒதுக்கி உள்ளோம்.
இலங்கையில் தமிழர்களுக்கான உரிமை போராட்டத்தை, விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்போம் என்று மத்திய அரசு அறிவிக்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாமக பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றார்.