குட்டையில் விழுந்து குட்டி யானை பலி
கோவை: சத்தியமங்கலம் அருகே வனவியல் பூங்காவில் உள்ள குட்டைக்கு தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை ஒன்று எதிர்பாராவிதமாக மரணமடைந்தது. தாய் யானை சோகத்துடன் நின்று பிளிறிய காட்சி பார்த்தவர்களின் நெஞ்சை உருக்கியது.
சத்தியமங்கலத்துக்கு அருகில் பண்ணாரி செல்லும் வழியில் கூயனூர் பிரிவு என்னும் இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனவியல் பூங்கா ஒன்று உள்ளது.
இங்கு யானைகள் தண்ணீர் குடிக்க வசதியாக குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குட்டைக்கு ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை சத்தியமங்கலம் வன அதிகாரி எம்.எஸ்.மணிக்கு குட்டைக்கு அருகில் யானைக்குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகில் மற்ற யானைகள் சோகமாக நின்று கொண்டிருந்தன.
கொஞ்ச நேரத்தில் மற்ற யானைகள் சென்றுவிட்டன. ஆனால், தாய் யானை மட்டும் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. பல மணி நேரம் கழித்த பின்னரே அது காட்டுப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அங்கு கால்நடை டாக்டர்களுடன் சென்ற வனத்துறையினர் குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை செய்து அதை புதைத்தனர்.
இதுகுறித்து வன அதிகாரி எம்.எஸ்.மணி கூறுகையில், இறந்தது ஒரு ஆண் யானை. அது பிறந்து மூன்று அல்லது நான்கு நாள் தான் ஆகியுள்ளது. தண்ணீர் குடிக்க வரும்போது எதிர்பாராவிதமாக இந்த குட்டியானை இறந்துள்ளது என்றார் வன அதிகாரி.