தலிபான்கைள குளிர்விக்க இஸ்லாமிய சட்டம்!
இஸ்லாமாபாத்: தலிபான்களின் அட்டகாசத்தை அடக்கும் வகையில், அவர்கள் கோரி வரும் இஸ்லாமிய சட்டத்தை, பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், அமல்படுத்த பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் தலிபான்கள் உள்ளிட்ட தீவிரவாதிகளிடம்தான் உள்ளது.
குறிப்பாக ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் தங்களது கோட்டை போல வைத்துள்ளனர். வட மேற்கு எல்லைப்புற மாகாணம், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது.
இப்பகுதியிலிருந்து தலிபான்களையும், அல் கொய்தா உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புகளையும் சேர்ந்தவர்களை விரட்டியடிக்க பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. ஆனால் இதுவரை அதில் வெற்றி கிடைத்தபாடில்லை.
பாகிஸ்தானுக்கு உதவியாக அமெரிக்கா உள்ளிட்ட நேடோ படைகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏவுகணைகளை வீசித் தாக்கி வருகின்றன.
தீவிரவாதிகளுடன் பலமுறை பாகிஸ்தான் பல்வேறு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் எவையும் பலன் தரவில்லை. இந்த நிலையில், புதிய திட்டம் ஒன்றை தீவிரவாதிகள் முன்பு பாகிஸ்தான் வைத்துள்ளது.
அதன்படி ஸ்வாட் பள்ளத்தாக்கு உள்பட வட மேற்கு எல்லைப்புற மாகாணம் முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த அது திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இன்றைக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையடுத்து ஸ்வாட் பகுதியில் 10 நாள் போர் நிறுத்தத்தை தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
படை பலத்தால் மட்டும் அல் கொய்தா, தலிபான்களை ஒழிக்க முடியாது என்பது பாகிஸ்தானின் கருத்து. எனவேதான் ஷரியா சட்டத்தின் மூலம் தீவிரவாதிகளை அமைதிப்படுத்த பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.
இஸ்லாமிய சட்டத்தை பிரயோகப்படுத்துவது குறித்து தலிபான் ஆதரவு தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வட மேற்கு எல்லைப்புற மாகாண நிர்வாக தலைவர்கள் கூறியுள்ளனர்.
அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் குழுவின் பெயர் டெஹரிக் நிபாஸ் இ ஷரியத் முகம்மது என்பதாகும். இதன் தலைவர் சுபி முகம்மது. இவர் ஸ்வாட் தலிபான் அமைப்பின் தலைவரான மெளலானா பசுல்லாவின் மாமனார் ஆவார்.
சுபி முகம்மதுவை கடந்த ஆண்டுதான் பாகிஸ்தான் அரசு சிறையிலிருந்து விடுவித்தது. வன்முறையை கைவிடுவதாக உறுதியளித்து விட்டு வெளியே வந்த சுபி முகம்மது, மறுபடியும் வன்முறைப் பாதைக்குத் திரும்பி விட்டார்.
இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக ஸ்வாட் பள்ளத்தாக்கு அடங்கிய மலகந்த் கோட்டத்தில் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும்.
ஆனால் தற்போது ஸ்வாட் பகுதியில் தலிபான்கள் இஸ்லாமியச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். அந்த சட்டம் அரசின் இஸ்லாமிய சட்டத்தை விட மிகக் கடுமையானது.
அதன்படி பெண்கள் படிக்கக் கூடாது, வீட்டுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு அறவே கூடாது என்பது தலிபான்களின் இஸ்லாமிய சட்டமாகும்.
அரசின் திட்டம் குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் முஸ்லீம் கான் கூறுகையில், இஸ்லாமியச் சட்டம் இப்பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டால் அதை நாங்கள் ஏற்போம்.
இதற்கு வழி செய்யும் வகையில் 10 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்கிறோம். இருப்பினும் எங்களை யாராவது தாக்கினால் திருப்பிச் சுடுவோம்.
இஸ்லாமியச் சட்டம் வந்து விட்டால் ஸ்வாட்டில் எந்தவித வன்முறையும் இருக்காது. தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு விடுவார்கள்.
கடந்த ஆறு மாதங்களாகப் பிடித்து வைத்திருந்த சீனப் பொறியாளரை நாங்கள் விட்டு விட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications