கர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் விரைவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என அம் மாநில சட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இந் நிலையில் இப்போது மதமாற்றத் தடை சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. கிராம மற்றும் நகர்புறங்களில் இந்துக்கள் அதிக அளவில் கிறிஸ்துவ மாதத்துக்கு மாறி வருவதாகவும், இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் சுரேஷ் குமார் கூறுகையில்,
மதமாற்ற தடை சட்டம் ஏற்கனவே பல மாநிலங்களில் அமலில் இருக்கிறது. இதே போன்ற சட்டத்தை கர்நாடகாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒன்றுமறியாத இந்துக்கள் பிற மதங்களுக்கு மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதை தடுக்க இந்த சட்டம் உதவும். ஏழை, எளிய மக்களிடம் இந்துவத்தின் குறித்து தவறான கருத்துக்களை திணித்து அவர்களை இப்பிரச்சினையில் பலிகடாவாக்க பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்ததை போன்ற (ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்ட சட்டம்) மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர இருக்கிறோம். இதை மிகவும் கவனமாக தயார் செய்து வருகிறோம்.
பெங்களூர், மைசூர், கோலார், சித்ரதுர்கா போன்ற ஊர்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். கிராம புறங்களில் நடக்கும் மதமாற்றங்கள் வெளி உலகிற்கு அதிகம் தெரிவதில்லை என்றார் சுரேஷ் குமார்.












Click it and Unblock the Notifications