தமிழக (தேர்தல்) பட்ஜெட்: ரூ. 100 கோடி வரி சலுகைகள்

மொத்தம் ரூ. 100 கோடி அளவுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 21ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை நடந்தது.
இதையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சட்டசபை தொடங்கியதும் அன்பழகன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அன்பழகன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் உரை இது. வழக்கமாக பிப்ரவரி இறுதியில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக, மதிமுக புறக்கணிப்பு:
காலை ஒன்பதரை மணிக்கு பட்ஜெட் உரையை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்யத் தொடங்கியதுமே அதிமுக உறுப்பினர்கள் எழுந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார் அன்பழகன்.
இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மாறாக பல வரிச் சலுகைகள், புதிய சலுகைகள், புதிய திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாணவர்கள், பெண்கள், முதியோர்களுக்கான பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரைத் துறையினருக்கான முக்கியச் சலுகையான வெளிப்புறப்படப்பிடிப்புகளுக்கான கட்டண ரத்து மற்றும் தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து ஆகிய இரண்டும் மறு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்களுக்கும் சில வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
11வது ஐந்தாண்டு திட்டத்தில் முதல் ஆண்டான 2007-08ல் ரூ.85,344 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் ரூ.17,500 கோடி அளவில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலம் என்பதால் பெரிய அளவிலான வரிச் சுமைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
கருணாநிதி வராத முதல் பட்ஜெட்
முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்பொழுது அவர் பங்கேற்காத முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடியே, தனது உதவியாளர் சண்முகநாதனை விட்டு பட்ஜெட்டை வாசிக்கக் கேட்டு, அதில் பல திருத்தங்களையும், அறிவுரைகளையும் கூறி பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்தார் முதல்வர்.
நேற்று காலை எட்டேகால் மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை பட்ஜெட்டை வாசிக்கக் கேட்டு மாற்றங்களைச் செய்தார் கருணாநிதி.
இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் வழக்கம் போல அனல் பறக்கும் என கருதலாம்.












Click it and Unblock the Notifications