பட்ஜெட்: கருணாநிதி, சிதம்பரம், ராமதாஸ் பாராட்டு - ஜெ. கண்டனம்
சென்னை: மத்திய இடைக்கால பொது பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஒரு நடவடிக்கையும் அறிவிக்கப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படாமல் 2008-09 நிதி ஆண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியை எதிர் பார்ப்பது திருப்தி அளிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியை பட்ஜெட் உரை விவரித்துள்ளது. சிரமங்கள் நிறைந்த நடப்பு ஆண்டில் உறுதியாக செயல்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கங்கள், தேர்தலுக்கு பிறகு அமையும் அரசு சமர்ப்பிக்கும் பட்ஜெட்டில் கட்டாயம் மாறுபடும்.
விரைவான மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையிலேயே காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து செயல்படுகிறது என்றார்.
ஒளி ஏற்றும் பட்ஜெட் - கருணாநிதி
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
பொருளாதாரத் தேக்கச் சூழ்நிலையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அடித்தள மக்களின் வாழ்வில் தொடர்ந்து ஒளி ஏற்றி வைக்கும் நிதிநிலை அறிக்கையாக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை விளங்குகிறது என்று கூறியுள்ளார்.
மகிழ்ச்சி - ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பா.ம.க.வின் இந்தாண்டு நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தி, சுட்டிக்காட்டியுள்ள வேலை வாய்ப்பு முன்னுரிமை திட்டங்களுக்கும், வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது கண்டு பா.ம.க. மகிழ்ச்சியடைகிறது; பாராட்டுகிறது என்று கூறியுள்ளார்.
ஒரு நடவடிக்கையும் இல்லை - ஜெயலலிதா
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், நேர்முக மற்றும் மறைமுக வரிவிதிப்பில் மாற்றம் ஏதும் இடம்பெறாதது துரதிஷ்டவசமானது.
உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு எவ்வித நிவாரண நிதியும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. வரவு-செலவு திட்ட விதிமுறைகளைக் பின்பற்றவும் அவர் தவறிவிட்டார்.
பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும், நாட்டின் வளர்ச்சியை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications