தப்பி வரும் தமிழர்கள் மீது மீண்டும் குண்டு வீச்சு -50 தமிழர்கள் பலி
வன்னி: இன்று அதிகாலை 108 தமிழர்களை கொடூரமாகக் கொன்ற இலங்கை படையினர் இன்று பிற்பகல் நடத்திய இனனொரு வெறித்தனமான தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இரணைப்பாளை பகுதியில் உள்ள அனந்தாபுரம் என்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு விரைந்து சென்ற தமிழர்களைக் குறி வைத்து நான்கு விமானப்படை விமானங்கள் கிளஸ்டர் எனப்படும் கொத்து வெடிகுண்டுகளை வீசி இன்று பிற்பகல் 12.50 மணிக்குத் தாக்கியுள்ளன.
இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்த 70 பேர் மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பத்து பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விடாமல் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகிறது.
தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் காயமடைந்து கிடக்கின்றனர் பல தமிழர்கள். அவர்களை உடனடியாக திரிகோணமலை அல்லது பிற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லாவிட்டால் பெரும் உயிரிழப்பு தவிர்க்க முடியாதுத என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வன்னிப் பகுதியில் எந்தவிதமான மருந்துகளும் இல்லை. காரணம், இலங்கை அரசு மருந்து சப்ளையை இப்பகுதியில் நிறுத்தி 2 மாதங்களாகிறது. இதனால் காயமுற்ற பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த பத்து மணி நேரத்தில் முல்லைத்தீவில் மட்டும் 160 பேர் உயிரிழந்துள்ளதாக மாத்தளன் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.