கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு
கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற பிரமுகர் இன்று பிற்பகல் தீக்குளித்தார்.
கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் (29). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார் தமிழ்வேந்தன். பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்தார்.
இதைப் பார்த்து, அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ்வேந்தனைக் காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் அதற்குள் உடலின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இதையடுத்து உடனியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் தமிழ்வேந்தனை அனுமதித்துள்ளனர்.
போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த தமிழ் வேந்தன், ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள். என்னைப் போல் யாரும் தீக்குளிப்பு முடிவை மேற்கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்வேந்தனின் உடலில் 95 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தமிழ்வேந்தனுக்கு 7 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளது.