பாமக வெளிநடப்பு: மதிமுக-இ.கம்யூ வெளியேற்றம்
சென்னை: சட்டசபையில் இன்று இலங்கைப் பிரச்சனை வெடித்தது. அரசைக் கண்டித்து பாமகவினர் வெளிநடப்பு செய்தனர். மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை சட்டசபை கூடியதும் மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் எழுந்து கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் சபாநாயகர் ஆவுடையப்பன் கேள்வி நேரம் முடிந்தவுடன் உங்கள் பிரச்சினையை எழுப்புங்கள் என்றார். இதை ஏற்க மறுத்து கண்ணப்பன் தொடர்ந்து பேச முயன்றார். சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்காததால் எதிர்ப்பு தெரிவித்து மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் அவைக்குத் திரும்பினர்.
இந் நிலையில் பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏ வேல்முருகன் சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்சனையைக் கிளப்பினார். தமிழகத்தில் இந்த பிரச்சனையை முன் வைத்து இதுவரை 5 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர், நேற்று கடலூரில் தமிழ் வேந்தன் என்ற வாலிபர் இறந்தார் என்றார்.
வேல்முருகன் தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் வேல்முருகன் தொடர்ந்து நின்றபடி பேச முயன்றார்.
இதையடுத்து சபாநாயகர் திமுக உறுப்பினர் ஐயப்பனை பேச அழைத்தார். ஐயப்பன் பேசுகையில், கடலூரில் இறந்த தமிழ்வேந்தன் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலளிக்கையில், இலங்கை தமிழர்களுக்காக தீ குளித்த தமிழ்வேந்தன் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உதவி வழங்கப்படும். இந்த தொகை ஐயப்பன் எம்எல்ஏ மூலம் இன்றே வழங்கப்படும் என்றார்.
இதையடுத்து வேல்முருகன் எம்எல்ஏ மீண்டும் எழுந்து பேசத் தொடங்கினார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து பாமக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து பாமக எம்எல்ஏக்களை வெளியேறுமாறு சபாநாயகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைக் கேட்டவும் பாமகவினர் தாங்களாகவே வெளிநடப்பு செய்தனர்.
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம், மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் ஆகியோர் எழுந்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச அனுமதி கோரினர்.
ஆனால், அவர்களுக்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை அவையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் கூறினார்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டப்படியே இருந்தனர்.
இதையடுத்து அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் வந்து மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.
வெளிநடப்பு செய்த பின் நிருபர்களிடம் கண்ணப்பன் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அங்கு நேற்று மட்டும் பெண்கள் குழந்தைகள் உள்பட 132 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிணங்கள் தெருக்களில் கிடக்கின்றன. அவற்றை எடுக்க ஆள் இல்லை.
நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி போரை நிறுத்த சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் இந்திய அரசு சிங்கள அரசுக்கு துணை போவதை ஒப்புக் கொண்டுள்ளார். ராஜபக்சே இலங்கையில் சொல்வதையே பிரணாப் முகர்ஜி இங்கு சொல்லி இருக்கிறார். இலங்கை தமிழர்களின் வேதனையை தாங்க முடியாமல் ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாட்டில் உயிர் தியாகம் செய்து வருகிறார்கள்.
கடலூரில் நேற்று ஒரு இளைஞர் தீக்குளித்து இறந்தார். தமிழர்களை காப்பாற்ற இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பற்றி பேச கேள்வி நேரத்தை ஒத்திவைத்து நேரம் ஒதுக்குமாறு கேட்டோம். அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை என்றார்.