திமுக, பாமக விலக வேண்டும்: தா.பாண்டியன்
ராஜபாளையம்: மத்திய அரசில் இருந்து திமுக, மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜபாளையத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் ராஜபக்சே அரசால் அப்பாவி தமிழ் மக்கள் தினசரி கொத்து கொத்தாக செத்து மடிந்து வருகின்றனர்.
விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவத்தினர் அழித்து வருகின்றனர்.
லோக்சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரதை கண்டித்து, அந்த அரசில் அங்கம் வகிக்கும் திமுக, பா.ம.க. போன்ற கட்சிகள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வெளியில் வந்து போராட வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் மின் வெட்டு பிரச்சனை தலை தூக்கியுள்ளது. எனவே இதை சரியான நேரத்தில் முறையாக கண்டறிந்து உடனடி தீர்வு காணவேண்டும் என்றார்.