Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமக-எதிர்க் கட்சிகள் கூண்டோடு வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

Assembly
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வரலாறு காணாத வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி சட்டசபையில் கூச்சல்-குழப்பம் செய்த அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 5 கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் தொடங்கும் முன் அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த மோதல் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.

ஆனால், இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். கேள்வி நேரத்திற்கு முன் எந்த பிரச்சனையையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

ஆனால் பாமக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் அமராமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கூச்சலிட்டனர். இதனால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது. சபாநாயகர் அவர்களைப் பார்த்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.

அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் நடந்த மோதல் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள படங்களை அவையில் காட்டி பேச ஆரம்பித்தனர்.

இதைக் கண்டித்த சபாநாயகர், என் அனுமதியின்றி அவையில் பத்திரிகைகளில் வெளிவந்த படங்களைக் காட்டக் கூடாது என்றார். பின்னர் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறி அவை நடவடிக்கைகளை தொடங்கினார்.

திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கேள்வி கேட்டு அமைச்சர்கள் பதிலளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த 5 கட்சிகளின் எம்எல்ஏக்களும் தொடர்ந்து நின்றவாறே குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந் நிலையில் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆனால் பாமக உறுப்பினர்கள் மட்டும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்த பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.

அவர்களை சபாநாயகர் மீண்டும் மீண்டும் எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து கோஷமிடவே அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவைக் காவலர்களால் பாமக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது அவை காவலர்களுக்கும், சில பாமக எம்எல்ஏக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் அவையில் இருந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் படம் சரிந்தது. அப்போது சபாநாயகர், பாமக உறுப்பினர்கள் காமராஜர் படத்தை உடைப்பது முறையல்ல, அவர்களை அவைக் காவலர்கள் உடனே வெளியேற்ற வேண்டும் என்றார்.

இதையடுத்து சில பாமக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் அவைக்கு வந்தனர். அதேபோல மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களும் மீண்டும் அவைக்குத் திரும்பி வந்தனர்.

கேள்வி நேரம் முடிந்தவுடன் மீண்டும் இந்தப் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் மீண்டும் எழுந்து நின்றனர் கும்பலாக கோரிக்கை விடுத்தனர்.

அப்போது சபாநாயகர், இது தொடர்பாக ஒத்திவைப்பு மற்றும் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்தவர்களின் பட்டியலை வாசித்துவிட்டு இந்தப் பிரச்சனை குறித்து விதி 110ன் கீழ் சட்ட அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வாசிப்பார் என்று அறிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் எழுந்து அறிக்கையை வாசிக்க தொடங்கினார். ஆனால் எதிர்கட்சி உறுப்பினர்கள், தங்களை இந்த பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூச்சலிட்டனர்.

அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதால் மீண்டும் கூச்சல்- குழப்பம் நிலவியது.

ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையை உரத்த குரலில் வாசித்துக் கொண்டே இருந்தார்.

அவர் அறிக்கையை வாசித்து முடித்தபின் சபாநாயகர் எழுந்து, விதி110ன் கீழ் வாசிக்கப்பட்ட அறிக்கை மீது விவாதம் நடத்த முடியாது என்று கூறிவிட்டு, மற்ற அவை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கொடுத்த குடிநீர் பிரச்சனை தொடர்பான கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது அவரை சபாநாயகர் பேச அழைத்தார்.

இதையடுத்து 4 கட்சிகளின் உறுப்பினர்களும் நீதிமன்ற மோதல் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் உரத்த குரல் எழுப்பினர்.

அவர்களை சபாநாயகர் பலமுறை எச்சரித்தார். ஆனால் அவர்கள் தங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி கூச்சலிட்டதால் அவைக் காவலர்களை அழைத்த சபாநாயகர், அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து அவைக் காவலர்கள் இந்த கட்சிகளின் எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.

பாமக வாயை பொத்தி போராட்டம்:

அவையிலிருந்து முன்னதாக வெளியேற்றப்பட்ட பாமக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் உள்ள சாலையில் வாயை கையால் பொத்திக் கொண்டு உட்கார்ந்து நூதன போராட்டம் நடத்தினர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி,

சட்டசபை நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மோசமான நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. வெளியேற்றப்பட்டோம்.

ஆனால் கேள்வி நேரம் முடிந்த பிறகும் விவாதம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதன் மூலம் சட்டமன்ற ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதற்கு அடையாளமாக வாயை பொத்திக் கொண்டு தரையில் உட்கார்ந்துள்ளோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+